நான்கு ஜாம விரதபூஜை முறை

காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, வீட்டில் சிவபூஜை செய்வதுடன் சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அந்த வேளையில் சிவனை போற்றும் மந்திரங்கள் உச்சரிப்பது மிகவும் சிறப்பானது.
வசதியானவர்கள் மாலையில் ஆலயத்துக்குச் சென்று நான்கு ஜாம பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது வீட்டில் பூஜை செய்து, நித்திரை களைந்து, சிவ தோத்திரம் பாராயணம் செய்து, மறுநாள் காலையில் புனித நீராடி சூரியன் உதிக்கும் ஆறு நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று பகல் பொழுதை சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ கழிக்க வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்து, பால், பழம் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

இந்த விரதத்தை உணவு உண்ணாமல் இருந்து அனுஷ்டிக்க முடியாதவர்கள், முதல் ஜாம பூஜையின் பின் கொஞ்சம் நீரோ, பாலோ அருந்தலாம். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரையில் உள்ள 12 மணி நேரக் காலப்பகுதியைக் குறிக்கும். ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்.
நான்கு ஜாம பூஜை முறை :

முதல் ஜாமம்:– பஞ்சகவ்யம் என்று சொல்லப்படும் பால், தயிர், நெய், கோமியம், கோசலம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் வில்வம் சாத்தி, தாமரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்து, பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கலை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். ரிக் வேதம் ஓத வேண்டும்.

இரண்டாம் ஜாமம்:– பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, சந்தனமும், தாமரைப் பூவும் சாத்தி, துளசியால் அர்ச்சித்து, பாயசம் நிவேதனம் செய்து, யஜூர் வேதம் ஓதி வழிபட வேண்டும்.
மூன்றாம் ஜாமம்:– தேனால் அபிஷேகம் செய்து அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் சாதிமுல்லைப் பூவை சாத்த வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து அன்னம் நிவேதனம் படைத்து சாம வேதம் ஓத வேண்டும்.

நான்காம் ஜாமம்:– கரும்புச் சாற்றால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டைப் பூவும் சாத்தி, நீலோற்பலப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் அன்ன நிவேதனம் செய்து அதர்வண வேதம் ஓதி வழிபட வேண்டும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.