மிகப்பெரிய திருவிழாவான மஹா கும்பமேளா தொடங்கியது

உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்று கூடல் என்று கருதப்படும் கும்பமேளா நேற்று கங்கையும் யமுனை நதியும் அலகாபாதில் சங்கமிக்கும் இடத்தில் தொடங்கியது. பல நாட்கள் நடைபெறும் இந்த மத விழாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று(14.1.13) மட்டும் ஒரு கோடி பேர் அலகாபாத் சங்கமத்தின் நீராடியிருப்பார்கள். வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும் போதிலும், ஆயிரக்கணக்கான சாதுக்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் நீராட திரண்டிருந்தனர். உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்த நிர்வாண நாகா சாதுக்கள் இங்கு புனித நீராட வருவது, கும்பமேளாவின் போது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக கருதப்படும் என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வண்ணமயமான ஒரு ஊர்வலத்தில் வந்த நிர்வாண நாகா சாதுக்கள் மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே கங்கை யமுனை சங்கமத்தில் குதித்து நீராடினர். கும்பமேளா காலத்தில் சங்கமத்தில் குளித்தால் தமது பாவங்கள் கழுவப்பட்டுவிடும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இத்திருவிழாவையொட்டி அலகாபாத் நகர் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் 30,000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர பதினான்கு இடங்களில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் தேவைக்காக 40,000 க்கும் அதிகமான கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வகையான திருவிழாக்களின் போது, நதி நீர் கடுமையாக மாசடைவதால் அங்கு வரும் மக்களின் சுகாதாரம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. அங்கு நீராட வரும் பெரும்பாலான யாத்ரிகர்கள் சிறிதளவு கங்கை நீரை உட்கொண்டு தமது உற்றார் உறவினர்கள் அதைப் பருகும் நோக்கில் சிறிய புட்டிகளில் அடைத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது. ஆனால் சுகாதாரப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். கும்பமேளா காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆறு நாட்கள் கங்கை யமுனை சங்கமத்தில் புனித நீராடும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், நதிகளுக்கு மேலேயுள்ள அணைகளில் இருந்து கூடுதலாக நன்னீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 210 மில்லியன் டொலர்கள், அதாவது 1150 கோடி இந்திய ரூபாய்களை செலவு செய்கிறது. எனினும் கும்பமேளா மூலம் 12,000 கோடி ரூபாய்கள் அளவுக்கு வியாபாரம் இருக்கும் என இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. இத்திருவிழாவுக்கு இந்தியர்களைத் தவிர வெளிநாட்டிலிருந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.{புகைப்படங்கள்}

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.