நம்பினோர் கெடுவதில்லை!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றிப் பரவுகிறார். உயிர்க்கு உயிராய் தழைத்திருந்து, விழித்திருந்து எந்நேரமும் நம்மைக் காக்கும் சிவபெருமானுக்கு நாம் ந
 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என மாணிக்கவாசகர் சிவபெருமானைப் போற்றிப் பரவுகிறார். உயிர்க்கு உயிராய் தழைத்திருந்து, விழித்திருந்து எந்நேரமும் நம்மைக் காக்கும் சிவபெருமானுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் நல்ல நாள் தான் சிவராத்திரி.
 மாசி மாதம், தேய்பிறையாகிய கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி நாளே (14ஆம் நாள்) "மகா சிவராத்திரி' விரத நன்னாளாக விளங்குகிறது. இந்நன்னாளில் நாம் மேற்கொள்ளும் விரதம் "வேண்டுவார் வேண்டுவதே ஈவான்' எனப் போற்றப் பெறும் சிவபெருமானை சிந்தை மகிழ வைக்கிறது. நாம் நினைத்தவை இவ்விரதத்தில் கைகூடுகின்றது.
 "இந்நாள் எம்மைக் கண்டவர், நோற்றவர், பூசை பண்ணினர் நற்கதி அடைவர்' என ஈசனே உறுதியளித்துள்ளார் என "வரத பண்டிதம்' நூல் வழிமொழிகின்றது.
 ஆம்! எண் குணத்தானாகிய இறைவனுக்கு எட்டு விரதங்கள் சொல்லப்பட்டாலும் தலைமை தாங்குவது தன்னிகரற்ற சிவராத்திரியே! சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம் இவை சிவ
 பெருமானுக்குரிய சிறந்த நாட்கள் எனினும் பரமசிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தருவது சிவராத்திரியே!
 "நாள் செய்வதை நல்லோர் செய்யார்' என்ற பழமொழியை நாம் நன்கு அறிவோம்.
 இவ்விரதம் ஏற்ற இரவெல்லாம் விழித்து, சிவநாமம் ஜெபித்து இறைவனுக்கே இதயம் அளித்தால் அசுவமேதயாகம் செய்த பலன் அன்பர்களுக்குக் கிட்டும் என ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 "சிவம்' என்றாலே மங்களம் என்று பொருள். மங்களகரமான மகிழ்ச்சியைத் தரும் சிவராத்திரி ஐந்து வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
 பன்னிரண்டு மாதங்களிலும் தேய்பிறை, வளர்பிறை இரண்டிலும் வரும் சதுர்த்தசி திதி நித்திய சிவராத்திரி எனச் சொல்லப்பட்டுள்ளது.
 தை மாதம், தேய்பிறையில், பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் விரதம் இருந்து சதுர்த்தசியில் சதாசிவனைப் பூஜிப்பதே பட்ச சிவராத்திரி.
 மூன்றாவதாகச் சொல்லப்பட்டது "மாத சிவராத்திரி'.
 சதுர்த்தசி மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளில் வரும் மாத சிவராத்திரியை நாட்காட்டிகள் மூலம் அறியலாம்.
 "யோக சிவராத்திரி' என்பது திங்கள் கிழமையாகிய சோம வாரத்தில் அறுபது நாழிகையும், அமாவாசையும் இருக்கின்ற நாளில் மேற்கொள்வது.
 சிவபெருமானை "பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே" என்கிறார் அப்பர்.
 "உனைத் தினம் தொழுதிலன்' என்கிறார் அருணகிரி நாதர்.
 எனவே மேற்சொன்ன நான்கு வகையான சிவராத்திரியிலும், நாட்கள் அனைத்திலும் தொழுத நற்பலனை ஒரு சேர அளிக்கின்றது இந்த மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரி.
 திருநந்திதேவர் மூலம் சிவராத்திரியின் கீர்த்தியை அறிந்து சூரியன், மன்மதன், அக்னி, யமன், இந்திரன், குபேரன், முருகப் பெருமான் முதலியோர் பல வரங்கள் பெற்றார்கள்.
 கலைமகளை நான்முகன் நாயகியாகப் பெற்றதும், திருமால் சக்ராயுதம் பெற்றதும் இவ்விரதத்தை அநுஷ்டித்தே என அறிகின்றோம்.
 "எவ்வாறு வந்தது சிவராத்திரி?" என ஏடுகளைப் புரட்டினால் சுவை மிக்க பல கதைகளை நாம் அறியலாம்.
 1. ஒருசமயம் பிரம்மனாகிய நான்முகனுக்கும், விஷ்ணுவாகிய திருமாலுக்கும் "நாம் தான் பெரியவர்' என்ற ஆணவம் தோன்றியது. "இருவரில் யார் பெரியவர்? என அறிய சிவபெருமானின் அடி, முடி கண்டு முதலில் வருபவர் யார் என அறிவோம். அவரே பெரியவர் எனக் கொள்வோம்' என்று வாதம் நிகழ்ந்த காலத்தில் முனிவர்கள் பயந்தனர். எங்கும் இருள் சூழ்ந்தது. அனைவரையும் காக்க சிவபெருமான் அப்போது ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாக, லிங்கோற்பவராக எழுந்தருளினார். தேவர்கள், ரிஷிகள், திருமால், பிரம்மா என அனைவரும் அறிவு விழிக்கப் பெற்று சிவபெருமானை பூஜித்தார்கள். வழிபட்ட அப்பொன்னாளான நன்னாளே சிவராத்திரி.
 2.விளையாட்டாக உமையம்மை ஒரு சமயம் சிவபெருமானின் கண்களைத் தன் கைகளால் பொத்தினாள். அடுத்த வினாடி அகிலமே அந்தகாரத்தில் மூழ்கியது. பேரொளி வேண்டி பிரபஞ்சமே தொழுத சமயத்தில் சிவபிரான் அருள் வெளிப்பட்டது. அந்நாளே சிவராத்திரி.
 3. விடமுண்ட நீல கண்டனாக விளங்கும் சிவபெருமான் நஞ்சை உண்ட காலத்தில் ஆபத்து எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என அஞ்சி அனைவரும் சிவபெருமானை பூஜித்தனர். அப்பொழுதுதான் சிவராத்திரி பொழுது.
 4. யுக முடிவான பிரளயம் உண்டாகி அனைத்தும் அழிந்து போக சிவனும், சக்தியும் மட்டுமே இருந்தனர்.அப்போது உயிர்களைக் காத்தருள் அம்பிகை சிவபிரானை நான்கு காலங்களிலும் பூஜை செய்தார். சிருஷ்டியை மீண்டும் தோற்றுவிக்க சிவனை வேண்டிய பொழுதே சிவராத்திரி.
 5. உலக நலன் வேண்டி ஏகாதச உருத்திரர்கள் திருவிடைமருதூரில் சிவபெருமானை வழிபட்ட காலம் சிவராத்திரி.
 யுகங்களே நிமிடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் காலச் சுழற்சியில் சிவராத்திரியின் காரணத்திற்காக பல வரலாறுகள் லிங்க புராணம், ஸ்காந்தம், சிவ மகாபுராணம் போன்றவற்றில் சொல்லப்பட்டிருந்தாலும், அனைத்தில் இருந்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது சிவபரம்பொருளே மூலம்! சிவபெருமானே காலம்! சிவமயமே இந்த ஞாலம்!
 பால பருவம், இளம் பருவம், நடு வயது, முதுமை என நான்கு காலங்களிலும் மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும். அதற்காகத்தான் சிவபெருமானுக்கு நான்கு காலங்களிலும், சிவராத்திரியில் அபிஷேகம், ஆராதனை, நிவேதனங்கள், வழிபாடுகள்!
 மாலை 6 முதல் 9 மணி வரை முதல் ஜாம பூஜை. பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர்,சாணம் இந்த ஐந்தும் சேர்ந்த பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம். வில்வம், தாமரையால் அர்ச்சனை. இரவு 9 முதல் 12 மணி வரை இரண்டாம் ஜாமம். தேன், சர்க்கரை, பால், நெய், வாழைப்பழம் சேர்ந்த பஞ்சாமிருத அபிஷேகம். சண்பகம், துளசியால் அர்ச்சனை.
 இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் ஜாமம். தேன் அபிஷேகம், செங்கழுநீர், அருகால் அர்ச்சனை.
 அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் ஜாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நீலோத்பலம், விளா இலைகளால் அர்ச்சனை.
 நான்கு கால பூஜை அபிஷேகங்களைக் கண் குளிரக் கண்டு இரவு முழுக்க விழித்திருந்து, சிவபெருமான் திருமுறைகளைப் படித்து, கேட்டு அடுத்த நாள் நீராடி அன்னதானம் செய்து ஆத்ம திருப்தி அடையலாம். இன்றைய இருட்டில் மட்டும் நாம் விழித்திருந்து உபவாசம் மேற்கொண்டால் இனி நம் வாழ்வில் இருட்டே இருக்காது என இந்து மத புராணங்கள் உறுதியுடன் உரைக்கின்றன. "நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்பதுதானே பாரதியின் வாக்கு.

 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.