தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் தேர் திருவிழா .15.09.2016.

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா  வியாழக்கிழமை.15.09.2016.அன்று காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி மிக  சிறப்பாக   நடைபெற்றது.
காலை- 8 மணிக்கு வேற் பெருமான், விநாயகப் பெருமான், ஆறுமுகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை- 08.45 மணியளவில் விநாயகப் பெருமான், அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான், வேற் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் சித்திரத் தேரில் ஆரோகணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச தீபாராதனை இடம்பெற்று வேற்பெருமானின் சித்திரத் தேரிற்கு முன்பாக மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய் அடியவர்களால் உடைக்கப்பட்டது.
பின்னர் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, ஆலயத்தின் காண்டாமணி ஓசை ஓம்...ஓம்... என ஒலிக்க முற்பகல்-09.45 மணியளவில் இரதபவனி ஆரம்பமாகியது. அடியவர்கள் எம்பெருமானின் வடத்தைப் பிடித்து எல்லாம் வல்ல சந்நிதி வேற்பெருமானின் திருவருளைப் பெறுவதற்கு முண்டியடித்ததைக் காண 
முடிந்தது.
தேர் பவனி இடம்பெற்ற போது பல அடியவர்கள் தம்மை மறந்த நிலையில் ஆடியும், பாடியும் எம்பெருமானை மெய்யுருக வழிப்பட்டனர். நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் பறவைக் காவடி, செதில் காவடிகள் முதலான காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியளித்தும் எம்பெருமானைப் பக்திப் பெருக்குடன் 
வழிபட்டனர்.
முத் தேர்களும் முற்பகல்-10.30 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து எம்பெருமானை அர்ச்சித்து வழிபாடாற்றினர்.
ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் , பக்தர்களின் பாதுகாப்புக் கருதி 50 இற்கும் மேற்பட்ட பொலிஸாரும், சாரணர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் ஆலயச் சுற்றாடலிலுள்ள சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட 14 அன்னதான மண்டபங்களிலும் அன்னதானமும், ஆலய சுற்றாடலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் தோறும் தாக்க சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் கைங்கரியமும் இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த- 01 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் இடம்பெற்று வருவதுடன் நாளை-16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தோற்சவத்துடன்
 நிறைவு பெற உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.