தெல்லிப்பளை துர்க்கையம்மன்பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

யாழ்  தெல்லிப்பளை துர்க்கையம்மன்….
எங்கும் நிறைந்தவனாக, எல்லாம் வல்லவனாக, அணுவுக் கணுவாய், அப்பாலுக்கப்பாலாய், ஓருருவம், நாமமின்றி, அகிலத்தை ஆள்பவன் இறைவன். எங்கும் நிறைந்த இப்பரம்பொருளைச் சிவம் என்று போற்றுகின்றோம்.
நெருப்பிலே சூடு போலச் சிவத்துடன் இரண்டறக் கலந்திருப்பவள் சக்தி. சிவம் வேறு சக்தி வேறல்ல. ஒன்றின் அம்சமாக மற்றொன்று காணப்படுகின்றது. பழந்தமிழர் வழிபாட்டிலே, சக்தியைப் போற்றி வணங்குவது முதன்மைக் குரியதாகக் காணப்படுகின்றது.
சிவபூமியாக விளங்குகின்ற ஈழவள நாட்டில், சக்தி வழிபாடும் புராதன வழிபாடாகக் காணப்படுகின்றது. தெல்லிப்பழையில் துர்க்காதேவி, நயினை நாகபூசணி அம்மன், நல்லூர் வீரமாகாளி அம்மன், தாழையம்பதி துர்க்கை அம்மன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன், திருகோணமலை பத்திர காளியம்மன், வற்றாப்பளை கண்ணனை அம்மன், மாத்தளை முத்துமாரி அம்மன், பணிப்புலத்தில் முத்துமாரி அம்மன் போன்ற பல கோயில்கள் ஈழத்தில் பிரசித்தி பெற்ற அன்னை வழிபாட்டுத் தலங்களாகக் காணப்படுகின்றன.
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம், உலகெங்குமுள்ள சக்தி உபாசகர்களால் ஏற்றிப் போற்றப்படும் ஆலயமாக விளங்குகின்றது. இவ்வாலயம் யாழ்ப்பாணத்தின் வடபால், காங்கேசன் துறைப் பெருந்தெரு வழியே, எட்டாவது மைல் கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. இவ்வாலயம் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு 
மேற்பட்ட பழமையை உடையது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீதுர்க்காதேவி, சகல வல்லமை படைத்தவளாக, வேண்டியவற்றை வேண்டியாங்கு பக்தர்களுக்குக் கொடுப்பவளாக விளங்குவதால், தாயைத் தேடி ஓடும் கன்றைப்போல், துர்க்கை அன்மையை நாடிப் பக்தர்கள் ஓடுகின்றனர். இவ்வன்னை, பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் வாரி
 வழங்குபவளாகக் காணப்படுகின்றாள. இத்தேவியின் மகிமை அபிராமிபட்டரின் திருவாய் மொழிக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
தனந்தருங் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனந் தருந் தெய்வ வடிவுந் தருநெஞ்சில் வஞ்சமில்லா
வினந் தரு நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பர்க்கே
கனந் தரும் பூங்குழலாள் அபிராமி 
கடைக்ண்ளே
அகிலாண்டநாயகியான அன்னை பராசக்தியின் துர்க்கா திருக்கோலம், மக்களை வாழவைக்கும் தன்மையுடையது.
இவ்வாலயத்தின் பூர்வீகவரலாறு கதிர்காமர் என்னும் சைவப்பெரியாரோடு தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இவர் தெல்லிப்பழையிலுள்ள உழுகுடைப்பதியில், வவுனாவத்தையில் சைவமரபிலே 
தோன்றியவர். திருமூலர் வாக்கிற்கிணங்க
 ஊனுடம்பு ஆலயம் என்னும் சைவநெறியின் உத்தமநெறியிலே ஒழுகியவர். எங்கெல்லாம் சைவாலயங்கள் காணப்படுகின்றனவோ அங்கு சென்று வணங்கித் தலயாத்திரை செய்வதில் இன்பங்கொண்டவராகக் காணப்பட்டார். இவரது இந்த ஆர்வத்தின் பயனாகவே தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் தோன்றியது.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே காணப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இங்கு வருவதும், இங்குள்ள மக்கள் அங்கு செல்வதும் சாதாரண வழக்கமாகக் காணப்பட்டுள்ளது. அவ்வாறே தென் இந்தியாவை 
ஆண்ட அரசர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டுள்ளனர். ஈழமன்னர்கள் தென் இந்தியா மீது போர் தொடுத்துள்ளனர். இவ்வாறான நிகழ்வுகள் காலங்காலமாக நடைபெற்றுத் தற்காலத்திலும் தொடர்கின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தொடர்பினால் தென்னிந்திய அரசர்கள் ஈழத்தில் பல சைவக் கோயில்களைக் கட்டியும் திருத்தியும் சைவப்பணி புரிந்துள்ளார்கள்.
இரு நாடுகளுக்குமான தலயாத்திரை கடல் போக்குவரத்தின் மூலம் பெரிதும் விருத்தியடைந்து காணப்பட்டது. ஈழத்திலிருந்து தல யாத்தரைக்காகச் செல்வோர், அங்கிருந்து தெய்வ மூர்த்தங்களைக் கொண்டுவருவது சாதாரண விடயமாக அக்காலத்தில் காணப்பட்டது.
 கற்றோரும் மற்றோரும் ஞானியரும் ஈழத்திலிருந்து சென்று, இந்தியாவில் தங்கிச் சமயப்பணி, தமிழ்ப்பணி புரிந்துள்ளமையைச் சான்றுகள் சூழ்நிலையே தெல்லிப்பழையில் துர்க்கையம்மன் அருளாட்சி ஏற்படக் காரணமாக அமைந்ததெனலாம்.
வவுனாவத்தை உழுகுடைப்பதியில் வசித்த பெரியவர் கதிர்காமர், 1750 ஆம் ஆண்டளவில் தலயாத்திரை செய்யத் தீர்மானித்தார். அண்மையிலிருந்த காங்கேயன் துறையிலிருந்து தோணியேறி, தென்னிந்தியாவிலுள்ள வேதாரணியம் கரையை அடைந்தார். இவர் தலயாத்திரை சென்ற காலத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது
. விரும்பியபோது, விரும்பிய இடங்களுக்குச் சென்றுவர எந்தத் தடையும் காணப்படவில்லை. வேதாரணியத்திலுள்ள தலங்களைத் தரிசித்த கதிர்காமர், பாதயாத்திரையாகக் காசி செல்லத் தீர்மானித்தார். பாதயாத்திரை செல்லும் வழியிலுள்ள தலங்களைத் தரிசித்து
 இறுதியில் காசியை அடைந்தார். ஏறக்குறையப் பத்துவருடங்களாகத் தலங்களையெல்லாம் தரிசித்து வழிபாடியற்றி வந்தார். இக்காலப்பகுதியில் தமிழில் மேலும் தேர்ச்சி பெற்றதோடு சமஸ்திருதத்தையும் கற்றுத் துர்க்காதேவி உபாசகராக 
மாறியிருந்தார். 1760 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பத் தீர்மானித்த கதிர்காமர், தன்னோடு துர்க்காதேவி இயந்திரமொன்றையும், வெண்கலத்தினாலமைந்த திருமுகக்கெண்டி ஒன்றிணையும் கொண்டுவந்தார்.
திருக்கோயிலின் உயிர்நிலையாக மூலஸ்தானம் அல்லது கருவறையில் எழுந்தருளியுள்ள திருவுருவம் விளங்குகின்றது. திருக்கோயிலுக்குச் செல்லும்பொழுது முதலில் கண்ணில்படுவது கோபுரம். முதலில் கோபுரத்தை வணங்கிய பின்னர் கோயிலினுள் சென்று கருவறையில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தியையும் ஏனைய தெய்வங்களையும்
 வழிபடுகின்றோம்.
திருக்கோயில்களிலே எழுந்தருளியுள்ள இத்தெய்வங்களின் அருள்வீச்சிற்கு, மந்திரங்களினால் அருள்பெற்ற யந்திரப்பிரதிஷ்டையும் கும்பாபிஷேகக் கிரியைகளுமெ காரணமாகக் காணப்படுகின்றன. கோயிலின் உயிர்நிலையாகவுள்ள கருவறைத் திருவுருவம் இறைவனின் அருள் வடிவமாகவும், கோபுரம் இறைவனின் 
அருட்சின்னமாகவும் விளங்குகின்றன. சாதாரண உலகவழக்கில் யந்திரம் என்பது இயக்கும் கருவியைக் குறிப்பது. யந்திரம் இல்லாத வண்டி ஓடாது. அதே போல யந்திரபிரதிஷ்டை செய்யப்படாத திருவுருவத்தில் பூரணமான தெய்வீக அலைகள் ஏற்படுவதில்லை எனப் புராணங்களிலே
 கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான மந்திரசக்தியுள்ள துர்க்காதேவி யந்திரமொன்றைப் பெரியவர் கதிர்காமர், ஈழம் திரும்பும்பொழுது கொண்டுவந்தார். இந்தியாவிலுள்ள சக்திபீடங்கள் அறுபத்து நான்கு எனக் கூறப்பட்டுள்ளத. இவற்றுள் காசியிலே அமர்ந்து அருள்பாலிக்கும் சொப்பனேஸ்வரி பீடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
 இங்குள்ள துர்க்காதேவி பீடம். சகல கலைகளுடனும் அருட்பொலிவுடன் விளங்கும் சக்திபீடமாக விளங்குகின்றது. பல வருடங்கள் காசியில் தங்கியிருந்த கதிர்காமர் அன்னையின் பெருமையையும் புகழையும் எண்ணத்தில் கொண்டு, தன்னுடன் கொண்டு வந்த யந்திரத்தைக் காசியிலிருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பது சான்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.
காசியாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பிய கதிர்காமர், காங்கேயன்துறையை வந்தடைந்து, கீரிமலை சென்று அங்கு தீர்த்தமாடி, ஆலயதரிசனம் செய்தார். பின்பு அங்கிருந்து மூன்று மைல் தூரமுடைய தெல்லிப்பழையை நோக்கி நடந்துவந்து கொண்டிருந்தார். இவ்வாறு நடந்து வரும்பொழுது களைப்பு மேலீட்டால் நடையிலே
 தளர்வுகண்டார். இந்தியாவெங்கும் பல நூற்றுக்கணக்கான மைல்களைப் பாதயாத்திரையாகச் சென்ற கதிர்காமரின் உள்ளக்கிடக்கையில் ஒளிந்திருந்த அன்னை துர்க்கையானவன், அவ்விடத்திலே தங்கத் திருவுளம் கொண்டாள் போலும். களைப்பு மேலீட்டால் அங்கிருந்த இலுப்பைத்தோப்பிலே இளைப்பாறினார்.
திருவருட் கருணையால் அவர் முன் ஒரு சோதி தோன்றி, அவர் காசியிலிருந்து கொண்டுவந்த துர்க்கா யந்திரத்தை அவ்விடத்திலே ஸ்தாபிக்குமாறு ஆணையிட்டது. அவ்வாக்கைச் சிரமேற்கொண்ட கதிர்காமர், அவ்விடத்திலிருந்த இலுப்பைமரத்தடியில் யந்திரத்தையும் திருமுகக் கொண்டியையும் ஸ்தாபனம் செய்து வழிபடத் தொடங்கினார். இவ்வாறு இவர் வழிபட ஆரம்பித்த இடமே இன்று தெல்லிப்பழை, உழுகுடைப்பதி துர்க்காதேவி தேவஸ்தானமாக மாறியுள்ளது.
இத்தோப்பிலே பூசைநேரத்தில் நாகசர்ப்பங்கள் வருவதுண்டு. அவை பூசை முடிந்தவுடன் மறைந்துவிடும். இந்த நாகசர்ப்பங்களால் எவருக்கும் எவ்விதமான துன்பமும் ஏற்படவில்லை. இவற்றைக்கண்டு பக்தர்கள் அச்சமடையாது வழிபட்டு வந்துள்ளது. பூசை நேரங்களில், குருக்கள் இவற்றிற்குப் பாலும் பழமும் வைத்து
 வழிபடுவதும், அவை இவற்றை உட்கொள்ளலும் உண்டு. இவ்வாறு கதிர்காமரால் ஸ்தாபனம் செய்யப்பட்ட துர்க்காதேவி யந்திர வழிபாடு ஆன்மார்த்த வழிபாடாகவே ஆரம்பத்தில் காணப்பட்டது. தற்காலத்தில் அழகிய தேவஸ்தானமாகி, கோபுரமும் அலங்கார வளைவும் கொண்ட நுழைவாயிலுடன், தெப்பக்குளமும் அமைந்து எழிலுக்கு எழிலூட்டும் அருள்மிகு சக்தி ஆலயமாக தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் விளங்குகின்றது.
ஆன்மார்த்த வழிபாட்டு முறையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், தற்காலத்தில் ஆகமமுறைப்படி நடைபெறும் வழிபாட்டு முறைகளைக் கொண்ட பரார்த்த பூசைக்குரிய தேவஸ்தானமாக மாற்றம் பெற்றுள்ளது. ஏறக்குறைய நூற்றிஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலிருந்து அந்தணப்பெரியாரொருவர் யாத்திரை நோக்கமாகப் படகு மூலம் காங்கேயன் துறையை வந்தடைந்தார். அங்கிருந்து
 புறப்பட்டுத் தெல்லிப்பழையை வந்தடைந்தார். களைப்பு மேலீட்டாலும் பசியாலும் உழுகுடைப்பதியில் ஒரு மரத்தின் கீழ் அயர்ந்து துங்குவராயினர். உழுகுடைப்பகுதியில் நாகநாத உடையார் என்பவர் செல்வமும் செல்வாக்கும் படைத்தவராகக் காணப்பட்டார். ஒரு குறித்ததினத்தன்று அவருடைய கனவிலே ஸ்ரீ துர்க்காதேவி தோன்றி, தன்னையும் அநாதரவாயிருக்கும் காஞ்சி அந்தணரையும் ஆதரிக்குமாறு 
உணர்த்தினாள். ஆதியில் கதிர்காமர் காசியிலுள்ள சக்தி பீடங்களுள் ஒன்றான சொப்பனேஸ்வரி பீடத்திலிருந்தே துர்க்காதேவி யந்திரத்தைக் கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. சொப்பனம் என்றால் கனவு என்று பொருள்படும். சொப்பனத்தில் தேவி உணர்த்திய அருள்வாக்கின்படி, நாகநாத உடையார் ஆலயத்தையும் அந்தணரையும் ஆதரிக்க
 முற்பட்டார். தேவியின் கருணைக்குப் பாத்திரமாக விளங்கிய காஞ்சியிலிருந்து வந்த அந்தணரையே துர்க்காதேவி ஆலய அர்ச்சகராக நியமித்தார். இவ்வந்தணரின் சந்ததியினரே இன்றும் இவ்வாலம் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.
எட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த ஸ்ரீசங்கர பகவத்பாதர் அருளிய அறுவகை வழிபாடு, இந்து மதத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றது. சக்தியை முழுமுதற்தெய்வமாகக் கொண்ட சமயம் சாக்தம் என அழைக்கப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் சக்தி வழிபாட்டில் தந்திர சாத்திரம், நரபலி போன்ற அம்சங்கள் காணப்பட்டன. இவற்றை மாற்றி இயந்திரம் அமைத்துத் தேவியை வேதமுறைப்படி வழிபடும் தத்துவத்தை நடைமுறைக்குக் 
கொண்வந்தவரும் ஆதிசங்கரரே.
சிவமும் சக்தியும் வேறல்ல. ஒன்றிலிருந்து ஒன்று மாறாத தன்மையுடையதாகக் காணப்படுகின்றது. அண்டங்கள் யாவும் சிவசக்திமயமாகவே காணப்படுகின்றன. சிவம் என்பது சேதனம்-அறிவுப்பொருள். சக்தி என்பது அசேதனம்-ஐடம்பொருள். இவை இரண்டும் இணைபிரியாது உலகெங்கும் காணப்படுகின்றன
. மனித உடலிலும் சிவமும் சக்தியும் இரண்டறக் கலந்து காணப்படுகின்றது. உடல் அறிவில்லாதது, அசேதனம். அறிவின் வடிவாய்ப் பிரகாசிப்பது ஆத்மா. இரண்டும் இணைந்தே மனிதவாழ்க்கை இயக்கமாக அமைகின்றது. உலகிலுள்ள யாவற்றிலும், எல்லா இயங்குவனவற்றிலும் இதனைக் காண்கின்றோம். நெருப்பும் ஒளியும், மழையும் குளிர்ச்சியும், மண்ணும் வளமும், பூமியின் சுழற்சியும் பருவமும், சிவசக்தி தத்துவத்தை இயற்கை மூலம் எடுத்துக்காட்டுகின்றது. சக்தியில்லையேல் சிவம் இல்லை. அதனால்தான் சக்தியற்றுச் செயலாற்றுப் படுத்திருப்பவனைச் சிவனே என்று இருக்கின்றான் என்று கூறுவர்.
ஐடப்பொருளில் இயங்குகின்ற சக்தி ஒன்றுக்கொன்று உடன்பாடாய் இருக்கும்போது அதற்குக் கவர்ச்சி (Attraction) என்று பெயர். எதிர்மறையாய் இருக்கும்போது விலக்கு (Repulsion) என்று பெயர். ஜீவித தத்துவத்திலும் இதேபோல விருப்பும் வெறுப்பும் உள்ளன
. இவை யாவற்றையும் கடந்து விளங்குவது அன்பு. இதுவே இறை வடிவாய்த் திகழ்கின்றது. ‘சக்தியாய் சிவமாய்’ என்று சொல்லும் பெரியோர்கள் ‘அன்பே சிவம்’ என்றும் கூறியுள்ளார்கள். சிவனைச் சக்திமான் என்ற 
பெயராலும் அழைப்பர்.
இவ்வாறான பெருமை படைத்த சக்தியானவன் அனேக அம்சங்களைக் கொண்டவளாக விளங்குகின்றாள். யார் யார் எப்படி விரும்புகின்றார்களோ அம்முறையில் காட்சி தருகின்றான். எங்கும் நிறைந்தவளாகக் காணப்படும்போது பூரணி என்றும், சக்தி நிறைந்தவளாய் சகல வல்லமையும் கொண்டவளாக விளங்கும்போது, 
ராஜராஜேஸ்வரி, மூலப்பிரகிருதி என்றும் துதிக்கப்படுகின்றாள். காலசொரூபிணியாகும் பேர்து காளியாகின்றாள். வித்தையின் வடிவமாகும் போது சரஸ்வதியாகின்றாள். தனதானியத்தைக் கொடுக்கம் போது இலக்குமி ஆகின்றாள். ஞாலத்தை ஆதரிக்கும்போது மகாதேவி, பவதாரிணியாகப் போற்றப்படுகின்றாள். யாவற்றிலும் மேலாக ஈஸ்வரனுக்கு ஒப்பாகும்போது துர்க்கை என்று துதிக்கப்படுகின்றாள்.
கயிலைவாசன் கருணைபுரியக் கவலைக்கு மருந்தாக, இன்னல்களைப் போக்கி வேண்டியவற்றை அளிப்பவளாகத் துர்க்காதேவி தோற்றம் பெற்றாள். இத்தகைய பெருமை பெற்ற துர்க்கை வழிபாடு, பெரியவர் கதிர்காமரின் அன்பின் கருணையால், தெல்லிப்பழை உழுகுடைப்பதியில் சிறப்புற்றுக் காணப்படுகின்றது. கோயிற்கடவை எனப் புராதன பெயர் கொண்ட மாவிட்டபுரத்திற்கும் தெல்லிப்பழை துர்க்காதேவி கோயிலுக்கும் புராதன தொடர்புண்டு என்பதைப் பழைய ஏட்டுப்பிரதிகள்
 மூலம் அறியலாம்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் அன்னியரால் அழிக்கப்பட்டுப் பின்னர் 1815 ஆம் ஆண்டு கருங்கற்பணி நிறைவேற்றப்பட்டு, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துர்க்காதேவி ஆலயத்திலும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1829 ஆம் ஆண்டு புரட்டாசி விஜயதசமியன்று, மாவை முருகன், துர்க்காதேவி ஆலயத்திற்கு எழுந்தருளி வந்த வன்னிவாழை வெட்டும் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப்பகுதியில் நிலவும் போர்ச்சூழுல் காரணமாகப் பல ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாது 
தடைப்பட்டது.
வன்னிவாழை வெட்டு, நவராத்திரியோடு தொடர்புடையது. உலக மக்களை வாட்டி வதைத்த மகிடாசுரன் என்ற அரக்கனை அழித்து, அன்பையும் சமாதானத்தையும் நிலைநாட்டிய வெற்றித்திருநாள் விஜயதசமி. இத்தினத்தன்று வன்னிவாழை வெட்டுத் திருவிழா 
சக்தி ஆலயங்களில் மிகச்சிறப்பாக நடைபெறும். வன்னிவாழை வெட்டு என்பது தத்துவார்த்தமாகவும் ஆழமான
 கருத்துடையது. ஓவ்வொரு மனிதனிடத்திலும் தாமசம், சாத்வீகம் என்ற எதிர்மாறான இரு குணங்கள் காணப்படுகின்றன. தாமசகுணம் நிறைந்தவனால் உலகிற்கு 
அமைதியின்மை ஏற்படும். சாத்வீகம் எண்ணமுடைய மனிதனால் அன்பும் சமாதானமும் உலகிலே பேணப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டதே வன்னி வாழைவெட்டும் நிகழ்ச்சி. பராசக்தியானவள், மகிடாசுரனை வதம் செய்ததை நினைவு கூர்வதுடன், ஒவ்வொருவரிடமும்
 மறைந்துள்ள மகிடமாகிய தாமசகுணத்தை ஒழித்து, அமைதியான சாத்வீக குணத்தை அருளும் நிகழ்வே வன்னிவாழை வெட்டும் நிகழ்வாகும். இன்னுமோர் கோணத்தில் நோக்கின் மகிஷாசுரன் என்பது அஞ்ஞானம். தேவி ஞானவடிவானவள். மனித மனத்திலுள்ள அஞ்ஞானத்தை அழித்து ஞானம் மேலோங்கச் செய்பவள் துர்க்கை எனவும் கருத முடியும். இதனையே பாரதியார்,
நெஞ்சிற் கவலை நிகழும் பயிராக்கி
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை – தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மகாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு
எனக் கூறியுள்ளார்.
துர்க்கை என்பது அகழியைக் குறிக்கும். அகழி, எதிரிகள் மதிலை அடைய முடியாதபடி தடுப்பது போல, தன்னை வழிபடும் அன்பர்களுக்குத் துன்பம் அணுகாவண்ணம் காப்பதால் துர்க்கை என்று அழைக்கப்பட்டாள் என்று சாக்த சமயத்தின் தந்திர நூல்கள் கூறுகின்றன. துர்க்கை வழிபாடு தொன்மையானது. அகத்திய முனிவர், வனத்திலே துர்க்கையை பிரதிஷ்டை செய்து தரிசித்தமையால் வனதுர்க்கா என்ற பெயரைத் துர்க்கை பெற்றாள். கொற்றவையே துர்க்கை எனப் போற்றப்படுகின்றாள். சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் துர்க்கையைப் 
போற்றி,
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி
செங்கண் அரிமாண் சினவிடைமேல் நின்றாய்
கங்கை முடியணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்தவே நிற்பாய்
எனக் கூறப்பட்டுள்ளது.
துர்க்கையின் உருவநலன்களைப்பற்றி ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நான்கு அல்லது எட்டுக்கரங்களை உடையவள். மூன்று கண்களை உடையவள். கருணா நிறமுடையவள். மஞ்சள் உடை உடுத்தியிருப்பாள். எருமைத்தலை பீடத்தின்மீது நின்ற நிலை அல்லது சிஙகத்தில் மீது அமர்ந்த நிலையில் காணப்படுவாள். மார்பகங்கள் பாம்பினால் கட்டப்பட்டிருக்கும் என்று வரிணிக்கப்பட்டுள்ளது. 
சுப்ரதே ஆகமங்கள் இவளைத் திருமாலின் இளையதங்கை என்றும் ஆதிசக்தியிலிருந்து வந்தவளென்றும் கூறுகின்றன. இவளுடைய எட்டுக் கரங்களில், சக்கரம், சூலம், அம்பு, கேடயம், வில், மணி, பாசம் ஆகியவற்றை ஏந்தியிருப்பாள். சக்தி வழிபாட்டைக் கூறும் நூல்கள் தந்திரங்கள் எனப்படும். துர்க்கையில் மகிமையைக் கூறும் நூல்களுள் முக்கியமானது தேவிமகாத்யில் என்னும் நூல். இந்நூல் 700 பாடற்தொகுதிகளைக் 
கொண்டது.
அன்னை பராசக்தியின் வடிவமாகிய துர்க்கையை வேண்டிப்போற்றுவோர் துர்க்கையின் அருளைப்பெறுவர் என்று ஆன்றோர் கூற்று. போர்த்தெய்வமான கொற்றவை மகனாய் முருகன் போற்றப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணலாம். நக்கீரரின் ‘வெற்றிவேல்’
 போர்க் கொற்றவை சிறுவர் என அடிகள் முருகனுக்கும் சக்திக்குமுள்ள தொடர்பை உணர்த்துகின்றது. நக்கீரர் குறிப்பதற்கேற்ப, முருகப்பெருமானும் துர்க்காதேவியும் ஒரே போரில் அசுரரை அழித்து அமரரைக் காத்த வரலாறு ஒன்றுண்டு. தீயவர் அழிந்ததை விழாவாகக் கொண்டாடி, நல்லதைச் செய்ய மக்களைத் தூண்டும் இவ்விழா, தெல்லிப்பழை துர்க்காதேவி கோயிலில் இன்றுவரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு
 வருகின்றது. இவ்விழாவின் அடிப்படை ஒரு புராண வரலாறாகக் காணப்படுகின்றது. மகிஷாசுரன் என்னும் அசுரன் மும்மூர்த்திகளை நோக்கித் தவமிருந்து அளப்பரிய வரங்களைப் பெற்று அதன் மூலம் தேவர்களையும் மற்றையோரையும் பெற்று அதன் மூலம் 
தேவர்களையும் மற்றையோரையும் துன்புறுத்தி வந்தான். இவர்கள் பரம்பொருளாகிய பரமனிடம் சென்று முறையிட்டனர். இவர்கள் துயர்துடைக்க மும்மூர்த்திகளின் சக்திகளும் சேர்ந்து ஒருருவமாகத் தோன்றியவளே துர்க்கை. துர்க்கையுடன் துணையாக முருகப்பெருமானும் இணைந்து அசுரர்படைகளை அழித்தனர். 
அஞ்சத்தக்க தோற்றங்கொண்ட வியாக்கிராசுரன் அரசனாகவும், அவனது அமைச்சனாக மகிஷாசுரனும் விளங்கித் துன்பம் விளைத்ததால், முருகப்பெருமான் வியாக்கிராசுரனையும், துர்க்காதேவி முகிஷாசுரனையும் அழித்தாள். இதன்காரணமாகத் துர்க்கையானவள் மகிஷாசுரமர்த்தினி என்னும் திருக்கோலத்தில் காட்சி தந்து 
அருள்பாலிக்கின்றாள்.
துர்க்கையைப் போற்றிப் பேரருள்பெற்றோர் பலர். இவர்களில், பாதாளலோகம் சென்ற கிருஷ்ணனைக் காணாது, துன்புற்று வசுதேவரும் தேவகியும், மற்றும் பாரதப்போரில் அர்ச்சுனனும் பல சித்திகளைப் பெற துர்க்கையை ஆராதித்துள்ளனர். பூலோக அவதாரபுருஷர்களும்
 அரும்பெருங் காரியங்களை முடிப்பதற்கு முன் துர்க்கைபூசை செய்துள்ளனர்.
 இராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் துர்க்காபூசை செய்தே புறப்பட்டார். பஞ்சபாண்டவர்கள் வனவாசம்
 செய்த காலத்தில் காலத்தில் தங்கள் நிலையை அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களிடம் எடுத்துரைத்தார்கள். முனிவர்கள் பஞ்ச பாண்டவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து
 ‘நம் எல்லோரையும் துன்பத்திலிருந்து காப்பாற்றுபவள் துர்க்கையே துர்க்கையை வழிபட்டால் எவ்விதத் துன்பமும் தொடராது மறைந்துவிடும். அவளிடம் சென்று முறையிடுங்கள். அவன் எந்தக் குறையும் வராது காப்பாற்றுவாள்’ என்று கூறினார். அவ்வாறே பாண்டவர்களும் துர்க்காதேவியை வணங்கி மகரிஷிகளால் உபதேசம் செய்யப்பட்ட ஸ்ரீ துர்க்கா நட்சத்திர மாலிகா துதி என்ற இருபத்தியேழு சுலோகங்களை, நாள்தோறும் துதித்து, அன்னை துர்க்கையின் அருளைப் பெற்றனர்
. தாயின் கருணைக்கு எல்லையே கிடையாது. இக்காரணத்தினாலேயே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், அம்மையே அப்பா, தாயினும் நல்ல தலைவர், பால்நினைந்தூட்டும் தாய், தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை, தாயிற் சிறந்த தயவான தத்துவனே, மாத்ருதேவோ பவ என்றெல்லாம் இறைவனையும் தாய்மை விளங்கப்
 போற்றியுள்ளனர்.
இவ்வாறான மகத்துவங்களைக் கொண்ட துர்க்காதேவி வழிபாடு தெல்லிப்பழையில் சிறப்புப் பெற்றுக் காணப்படுகின்றது. இவ்வாலயத்தில் 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவம் மிக முக்கியமானது. ஆவணி மாத வளர்பிறை பூரநட்சத்திரத்தில் ஆரம்பமாகி,
 திருவோணத்தில் தீர்த்த விழாவோடு நிறைவுபெறும். இவ்வாலயம் பொதுமக்கள் ஆலயமாக விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக் கொடியேற்றத்திருவிழா பொதுமக்களின் உபயமாக இடம்பெறுகின்றது. பன்னிரண்டு தினங்கள் மிக விமரிசையாக நடைபெறும் திருவிழாவைக் காண நாட்டின் பல பாகத்திலிருந்தும் மக்கள் இங்கு கூடுவர். அன்னபூரணி மண்டபம் மகோற்சவ காலங்களில் அன்னம் பாலிக்கும் மண்டபமாகக் காட்சியளிக்கும்.
இங்கு காலத்திற்குக் காலம் அமைக்கப்படும் திருத்தொண்டுகளின் காரணமாக வெளிவீதி புதுப்பொலியோடு காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் சித்திரத்தேர் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மிக அழகிய சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட
 இராசகோபுரமும், அலங்கார நுழைவாயிலும் அமைக்கப்பட்டன. 1982 இல் துர்க்கா புஷ்கரணித் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு அழகிய சப்பரம் கட்டப்பட்டது. இவற்றோடு அன்னபூரணி கலியாண மண்டபம், பக்தர்கள் விடுதி, இசைக்கலை மண்டபம், அகதிகள் சாலை, அன்னதான மண்டபம், அலுவலர் இருப்பிடம், அந்தணர்கள் இருப்பிடம் ஆகியனவும் ஆலய வெளிவீதிக்கு அழகூட்டும் அமைப்புகளாகக் 
காணப்படுகின்றன.
1981 ஆம் ஆண்டு, சித்திரை மாதம், இராசகோபுரத்திற்கு நடைபெற்ற மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்புடையது. இவ்விழாவிற்குத் தமிழகத்திலிருந்து வேதவிற்பன்னர்களும், உறரிதாஸ் சுவாமிகளும் வருகை தந்தனர். இதேயாண்டு மே மாதம் இவ்வாலய முன்றலில் சென்னை சைவசித்தாந்த மாநாட்டுப் பவளவிழா மிகச் சிறப்பாக
 நடைபெற்றது. இவ்வைபவம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழகச் சைவசித்தாந்த பீடத்திற்கு ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் ஐம்பதினாயிரம் 
ரூபாவை வைப்பு நிதியாக வழங்கியமை,
 தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் சமய, சமூக மேம்பாட்டில் கொண்ட ஆர்வத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஸ்ரீவஸ்ரீ நாவலர் பெருமான் பேணிக்காத்த சைவமரபைப் பேணிக்காப்பதில் ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் அன்றும் இன்றும் முன்னணியில்
 நிற்கின்றது.
ஆலயங்கள் வெறும் அர்ச்சனைக்கூடங்களாகவும், விழாக்களை மட்டும் நடத்தும் மண்டபங்களாகவம் அமையாது, அறச்சாலைகளாக அமைந்து, மக்களோடு இணைந்து சமுதாயப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கையை இன்று வரை கடைப்பிடித்து வரும் தெல்லிலிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம், ஏனைய ஆலயங்களுக்கோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இவ்வாலயத்தின் சமூகப் பணிகள் ஏராளமானவை. பிறந்த மண்ணிலேயே தமிழ்மக்கள் காலந்தோறும்
 அகதிகளாக்கப்படும் கொடுமை நடைபெற்றுவந்துள்ளது. நாட்டிலே இனக்கலவரம் நடைபெற்ற காலங்களில் தமிழர்கள் தமது சொத்துக்களை இழந்து அகதிகளாக நாட்டின் ஏனைய
 பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவது காலங்காலமாக நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாணமன் தமது தாயகம் என்ற உணர்வோடு, தமிழர்களுக்குப் பாதுகாப்பளிக்கக்கூடிய பூமி என்ற உணர்வும் இதற்குக் காரணமாயிருக்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டிலே 500-க்கும் மேற்பட்ட அகதிகளை இக்கோயில் ஆதரித்து உணவு, உடை, உiயுள் வழங்கியது யாவரும் அறிந்த செய்தி. கலவரத்தினால் ஊனமுற்றோர் பல்வேறு உதவிகளைப் பெற்றனர். குருநகர்ப் படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், மட்டக்களப்பில் தமது வீடுகளை இழந்து தவித்தோருக்கும் 
பல உதவிகள் வழங்கப்பட்டது. பாதிப்பற்று வீடுகளைத் திருத்துவதற்கும், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அகதியாகக் காணப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், பணஉதவியையும் செய்து, மக்கள் பணியே மகேசன் பணி என, சொல்லும் செயனும் ஒன்றாகி, ஈழத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஸ்ரீதுர்க்காதேவி ஆலயம் விளங்குகின்றது.
ஏழையின் சிரிப்பில் ஆண்டவனைக் காணலாம் என்ற கொள்கையை முன்னெடுப்பதிலும், துன்பப்பட்டோர் துயரழிப்பதிலும் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றது. விழிப்புலனற்றோர், முடமானோர்,
 புற்றுநோயாளர் ஆகியோரின் வதிவிட வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கும், யாழ் அரசினர் வைத்தியசாலை 
அவசரசிகிச்சைப் பிரிவிற்கும், தெல்லிப்பழை அரசாங்கவைத்தியசாலை, தெல்லிப்பழை கூட்டுதல் வைத்தியசாலை ஆகியவற்றிற்கும் அன்பளிப்புச் செய்துள்ளது. அவற்றோடு பாடசாலைகளுக்கு வேண்டிய உதவிகளையும் அவ்வப்போது
 செய்து வந்துள்ளது.
அக்காலத்தில் மன்னர்களின் ஆதரவுடன் நடைபெற்று வந்த ஆலயங்கள், சமய சமூகப் பணியோடு, தாய்மொழி வளர்ச்சி தொடர்பான விடயங்களிலும் அக்கறை செலுத்தியுள்ளன. அந்த மரபை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் காணக்கூடியதாயுள்ளது. 
ஈழமண்ணிலே பல அறிஞர்களும் பல்வேறு புலமை பெற்றோரும் நூல்களை எழுதி, அவற்றை அச்சிற்கொண்டுவர வசதியின்றி வாழ்ந்துள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்து அந்நூல்களைத் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் நூல்வடிவாக்கி வெளியிட்டது. தேவஸ்தான நிதியில் ஒருபகுதி நூல்வெளியீட்டுக்காக ஒதுக்கப்பட்ட செய்தி பலருடைய புலமை 
வெளிவர உதவியது.
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் ஆற்றும் பணிகளில் தலையாயதும் அறப்பணியாகக் கருதப்படுவதுமான பணி, துர்க்காபுரம் மகளிர் இல்லப் பணியாகும். 1982 இல் ஆரம்பிக்கப்பட்ட இம்மகளில் இல்லம், ஆரம்பத்தில் சிறிய கட்டிடமொன்றிய, ஐந்து வயதுக்கு 
மேற்பட்ட சிறுமிகளை ஆதரித்து, சகல பராமரிப்புகளையும் வழங்கியது. இன்று நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகளை 
இவ்வில்லம் பராமரித்து வருகின்றது. இவர்களுள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அடங்குவர். பெற்றோரை இழந்தவர்கள், விவாகமாகாத பெண்கள், விதவைப்பெண்கள் எனப் பல்வேறுபட்ட
 பெண்களை இவ்வில்லம் ஆதரித்து வருகின்றது. இந்த இல்லம் சிறப்புற நடைபெறப் பலர் உதவியுள்ளனர். அறச்சிந்தனையுள்ள பலர் நிரந்தர வைப்புகளை ஏற்படுத்தி அதன்மூலம் கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்து உணவு, உடை, கல்வி போன்ற செயற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். வைத்தியத்துறையில் பணியாற்றும் பலர் தமது உதவியை இவ்வில்லத்திற்கும் தயங்காது செய்து வருகின்றனர்.
இவ்வாறான பணிகளில் துர்க்காதேவி தேவஸ்தானம் ஈடுபடுவதற்கு இங்கு நடைபெறும் சீரான நிர்வாகமுறையே காரணமாக
 இருக்கின்றது. 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட துர்க்காதேவி திருப்பணிச்சபையில் இணைந்து, அதன் பொருளாளர் பதவியை ஏற்று, ஸ்ரீ துர்க்காதேவி ஆலய முன்னேற்றத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். 1965 ஆம் ஆண்டு இவ் அம்மையாரது பெரு முயற்சியின் காரணமாக ஸ்ரீதுர்க்காதேவி
 கோயில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர் 1977 ஆம் ஆண்டு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இன்றுவரை தொடர்ந்து அறங்காவலர் சபைத் தலைவராக அம்மையாரே இருந்து வருகின்றார். செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய தலைமையில் இச்சபை மிகக் கண்ணியமான பணியை ஏறக்குறை கடந்த நான்கு தசாப்தங்களாகச்
 செய்து வருகின்றது.
அறப்பெருஞ்செல்வியான இந்த அம்மையாரின் பணி உலகெங்குமுள்ள இந்துக்களைத் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கையம்மன் ஆலயத்தின்பால் கவனங்கொள்ளச் செய்துள்ளது. துர்க்கா துரந்தரி 
என்ற பெயருக்கேற்ப (துரம் – பாரம், தரி – தாங்குபவர்) துர்க்காதேதவியின் பொறுப்பையும் தாங்குபவராக இவர் காணப்படுகின்றார். மனத்துக்கண்
 மாசிலராசி, துர்க்காதேவி தேவஸ்தானத்தை அறமுறையின் நெறிப்படுத்துவதோடமையாது, மக்கள் ஆலயமாக வளர்த்தெடுத்து பெருமை இவ் அம்மையாரையே சாரும். அறங்காவலர் ஒருவர் எவ்வாறு இருக்கவேண்டும்
 என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். உலகெங்கும் பரந்து காணப்படும் இந்து ஆலயங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தைத் திகழவைத்த பெருமை செல்வி. தங்கம்மா அப்பாக்குடடி அவர்களையே சாரும்.
கோயிற் சூழலில் வாழும் குடும்பப்பெண்களை இணைத்துத் தொண்டர் சபையை ஏற்படுத்தி, அவர்களை ஆலயத்தொண்டிலும் சமூகத்தொண்டிலும் ஈடுபடச் செய்தவர். இவர்கள் கூட்டுவழிபாடு
, அன்னதானப்பணி மற்றும் திருவலகிடம் போன்ற பணிகளிலும் தம்மை ஈடுபடுத்தும் முறையில் வழிகாட்டியவர். தெல்லிப்பழை இந்து இளைஞர்சங்கம். இவ்வாலயத்தோடு இணைந்து சரியைத்தொண்டாற்றும் முறையில் வழிமுறைகளை ஏற்படுத்தியவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற வாக்கைத் தாரக மந்திரமாகக் கொண்டு
 அயராது உழைத்து வருபவர். செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமது பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி அறக்கட்டளையொன்றை நிறுவி, அதன் மூலம் அறச்செயல்களைச் செய்து வருகின்றார். இந்நாளில் வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்புச்செய்தல், ஏழை மாணவருக்கு உதவுதல், சிறந்த நூல்களை
 வெளியிடுதல், முதிய அறிஞர்களைப் பாராட்டுதல் போன்ற நற்பணிகளையும் செய்து வருகின்றார். சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி, திருவாசகக்கொண்டல், செஞ்சொற்செம்மணி, சிவஞானவித்தவர் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பட்டங்களோடு அண்மையில் யாழ் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
தமிழ் சமயப் பணிகளில் ஆழங்காண முடியாத சமுத்திரமாக, சிவத்தமிழ்சமுத்திரமான விளங்குபவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள். இவருடைய சமய, தமிழ்? அறப்பணிகளுக்கு ஈடாக எவரையுமே குறிப்பிட முடியாது.
 தனக்குத்தானே நிகராக, சொல்லும் செயலும் ஒன்றாகி வாழும் அம்மையார் அவர்களால் தமிழும் சமயமும் மட்டுமல்ல தமிழ் சமூகமே சிறப்புப் பெற்றுக் காணப்படுகின்றது. அம்மையார் 
அவர்களை விட்டு தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய வரலாற்றை ஆராய்வதென்பது முடியாது காரிணம். ‘யாழ்ப்பாணத்தின் இந்து மதப்பண்பாட்டில், அண்மைக் காலத்தில்
 இரு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, இந்துக்களால் வழிபடப்பெறும் ஒரு பெண் தெய்வத்தின் வழிபாடு பற்றியது. மற்றது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கோயில் முகாமை பற்றியது. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி என்ற ஒரு தமிழாசிரியையின் ஆன்ம யாத்திரையினூடாக,
 அவரது புலமை முதிர்ச்சியின் வழியாக, அவரை வழி நடத்தும் சமூக, மத தரிசனத்தினூடாக இந்த இரு மாற்றங்களும் நிறைவேறியுள்ளன’ எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறிய கூற்று, சிவத்தமிழ்ச்செல்வி, துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டியின் சான்றாண்மையையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதாகக்
 காணப்படுகின்றது.
இத்தகை பெருமைகளைக் கொண்டவர், துர்க்கையின் அருளால் தான் போற்றி வளர்க்கும் மகளிர் இல்லப் பிள்ளைகளின் பெரியம்மாவாக, சகோதரியாக மிக அடக்கமாக வாழ்ந்து வருகின்றார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பின் சைவத்தமிழ் மரபுக்கு அச்சாணியானவர் துர்க்காதுரந்தரி செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பரமர்க் கங்காமேஎன்றவாறு அறப்பணி செய்வோர் தெய்வத்தின் அருளைப் பெற்றவர்களே.
இவ்வாறாகத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம் பல்வேறுவகையிலும் சிறப்புப்பெற்று, வெறும் பூசைகளையும் விழாக்களையும் நடத்துகின்ற ஆலயமாகக் காணப்படாது, மக்கள் ஆலயமாகச் சிறந்து விளங்குகின்றது.

ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
குசமம் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணி யைத் தொழு
வார்க்கு ஒரு தீங்கில்லையே….


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.